வரலாறு

மாவீரர் சுந்தரலிங்கம், வென்னிக் காலாடியார், கொங்கு நாட்டு தளபதி இராமசாமி மள்ளர் வரலாறு

Devendra Kula Vellalar வீரன் சுந்தரலிங்கம்

பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர், நெற்கட்டான்செவல் பாளையத்தின் படைத்தளபதி மாவீரன் வென்னிக் காலாடியார் மற்றும் கொங்கு நாட்டு புரட்சிப்படை தளபதி மாவீரன் இராமசாமி மள்ளர் ஆகியோர்களின் பங்களிப்பு இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் எவராலும் எக்காலத்திலும் அழிக்க முடியாத ஒரு அத்தியாத்தை உருவாக்கிருக்கிறது என்றால் அது மிகை அல்ல.

Maveeran Sundaralingam HD Images

இந்திய சுதந்திர போராட்ட

அவர்களின் வீரமும் மனவலிமையும் தான், ஆங்கிலேயர் மத்தியில் ஒரு பெரும் அச்சத்தையும் நடுங்கத்தையும் ஏற்படுத்தியது. இதனால், கப்பம் கட்டாத பல பாளைய மன்னர்கள் தப்பித்து கொண்டனர், தங்களது இறுதி நாள் மூச்சு வரை, உடல், பொருள், ஆவி ஆகியவற்றை இழந்து, இந்நாட்டின் சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டு அதற்காகவே போராடி இன்னுயிர் ஈட்டிய இம்மாவீரர்களின் தியாகங்கள் மக்கள் மனதில் என்றென்றும் போற்றுதல் குறியது.

பாஞ்சாலங்குறிச்சியின் படைத்தளபதி மாவீரர் சுந்தரலிங்க தேவேந்திரர் வரலாறு

மாவீரன் சுந்தரலிங்கம் குடும்பனார் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகில் கவர்னகிரி என்னும் கிராமத்தில் சித்திரை பௌர்ணமி அன்று 1771 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள் காலாடி என்ற கட்டக் கருப்பணனுக்கும் முத்திருளி அம்மாளுக்கும் பிறந்தார். ஏப்ரல்-16 வீரன் சுந்தரலிங்கம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
வறுமையின் காரணமாக இளமையில் வீர விளையாட்டக்களைக் கற்க இயலாவிட்டாலும் குறும்பும்,

அறிவு நுட்பமும் துணிச்சலும் சுந்தரலிங்கத்திடம் இருந்தன. கவர்னகிரியில் கிடைக்கு மந்தை போடும் இடங்களில் ஒரு கும்பல் ஆடுகளை திருடிக்கொண்டே இருந்தது. இதைக் கேள்விபட்ட சுந்தரலிங்கம் வெகுண்டெழுந்து, தானே ஆடு திருட்டு தடுப்புப் படைக்கு தலைமையேற்கிறேன் என்று சபதமேற்று ஆட்டுத் திருட்டை ஒழித்தார்.
இதனால் ஆடுகள் திருட்டை ஒழித்த வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் கவர்னகிரியையும் தாண்டி பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது.
அக்காலத்தில் பெரும் வீரர்களாக விளங்கிய பெரிய காலாடி, சின்னக் காலாடி மாடக் குடும்பனார், மொட்டை சங்கரன் காலாடி போன்றவர்களிடம் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்த சுந்தரலிங்கம், கவரினகிரி தற்காப்புப் படைப்பள்ளிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

சுந்தரலிங்கத்தின் வீரத்தைத் தனது அமைச்சர் தானாவதிப் பிள்ளையின் மூலம் கேள்விப்பட்ட கட்டபொம்மன் அவரைச் சந்தித்தே தீர வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். அதோடு அவரை எல்லைப் பகுதியை கண்காணிக்கப் படையில் சேர்த்துக் கொள்ள விரும்பினார். வீரன் சுந்தரலிங்கத்தின் வீரத்தையும் நேர்மையையும் பரிசோதிக்க வெள்ளையத் தேவனும் கட்டப்பொம்மனும் மாறுவேடத்தில் சென்றனர்.
இவர்களின் செயல் திட்டத்தின்படி அமைச்சர் தானாவதிப்பிள்ளை தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஓட்டப்பிடாரத்திலுள்ள பாஞ்சை கிராமத்தில் தன்னுடைய நண்பர் வீட்டில் சுந்தரலிங்கத்தை தங்க வைத்திருந்தார். அப்போது வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்த்திருக்கும்படி வீரன் சுந்தரலிங்கத்திடம் கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இந்த நேரத்தில் கட்டப்பொம்மனும் வெள்ளையத்தேவனும் நாங்கள் தான் வீட்டின் உரிமையாளர்கள் என்று அறிமுகம் செய்து அதே வீட்டிற்குள் நுழைந்தனர். சிறுது நேரத்தில் வீட்டிலிருக்கும் நகைகளைத்திருடிக்கொண்டு வெளியேற அவர்களைக் கையும் களவுமாகச் சுந்தரலிங்கம் பிடித்தார்.
நீங்கள் இந்த வீட்டின் உரிமையாளர் இல்லை என்பது எனக்குத் தெரியும் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று தான் கவனத்தோடு பார்த்துக் கொண்டே இருந்தேன். நான் நினைத்தபடியே நீங்கள் திருடர்கள் தான் என்று சொல்லி வாளை உருவினார் வீரன் சுந்தரலிங்கம்.

அதற்கு அவர்கள் நாம் மூவர் மட்டுமே இங்கே இருக்கிறோம். நகைகளைச் சரிபாகமாக பங்கிட்டு கொள்ளலாம் என ஆசை காட்டினார்கள். இதைச் சம்மதிக்காத வீரன் சுந்தரலிங்கம் உயிர்மீது உங்களுக்கு ஆசை இல்லையா என்று வாளை எடுக்க மாறுவேடத்தை வீரபாண்டிய கட்டபொம்மனும் வெள்ளையத்தேவனும் கலைத்தனர். தனது சோதனையில் வெற்றிப் பெற்ற வீரன் சுந்தரலிங்கத்தைப் பாஞ்சாலங்குறிச்சி அரசபையின் ஒற்றர் படைத் தளபதியாக அறிவிக்கிறேன் என்று கட்டபொம்மன் கூறினார்.

திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன் கட்டப்பொம்மனிடம் சமாதானம் பேச அழைத்தார். அப்போது ஜாக்சன் வரி விஷயத்தைக் கிளர வெகுண்டெழுந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் வானம் பொழிகிறது பூமி விளைகிறது. உனக்கு ஏன் தரவேண்டும் கிஸ்தி, வரி என்று வீரமுழக்கமிட்டார். மோதல் ஏற்படவே ஜாக்சன் துரை கட்டப்பொம்மனையும் அவனது ஆட்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். வெள்ளையர்கள் சதித்திட்டதை அறிந்து ஆயுதங்களுடன் மாறுவேடத்தில் வந்து வெள்ளை சிப்பாய்களைக் கொன்று குவித்தார் வீரன் சுந்தரலிங்கம். அவரது வாள் வீச்சில் ஏராளமானோர் உயிரை இழந்தனர். தலை தப்பியது போதும் என அஞ்சி ஓடினார் ஜாக்சன் துரை.
ஆனால் அவருடன் ஓடிய லெப்டினன்ட் கிளார்க்கை வீரன் சுந்தரலிங்கம் வாளால் வெட்டிச் சாய்த்தார். பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையில் கரியப்பன் என்ற கூலியாள் எட்டையபுரம் அரண்மனைக்கு ஒற்றனாகச் செயல்பட்டு வந்ததைக் கையும் களவுமாகப் பிடித்தார். இதற்கு காமாட்சி என்ற அவரது காதலியும் கரியப்பனின் மனைவியும் உதவி செய்தார்கள்.

எட்டையபுரம் எட்டப்பரின் பட்டத்துக் கதிரையைக் கவர்ந்து வர திட்டமிட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். அந்த வேலை வீரன் சுந்தரலிங்கத்தின் தந்தை கட்டக் கருப்பணனிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பா கடத்திவரப்பட்ட எட்டையபுரத்தின் பேய் குதிரை என்று அழைக்கப்பட்ட அந்த பட்டத்து குதிரை யாருக்கும் கட்டுப்படாமல் சண்டித்தனம் செய்து வந்தது. அக்குதிரையை அடக்க நினைத்தார் கட்டப்பொம்மன். பொங்கல் திருவிழா அன்று வீரஜக்கம்மா கோவில் வளாகத்தில் ஜல்லிக் கட்டின் போது காளைகளுடன் அந்தக் குதிரையையும் இறக்கிவிட முடிவெடுத்தார்.
இந்தக் குதிரையை அடக்குபவர்களுக்கு அக்குதிரையையே பரிசாக வழங்கப்படும் என அறிவித்துக் களத்தில் இறங்க அக்குதிரையை அடக்க யாரும் முன்வரலில்லை மேடையில் இருந்த வீராபாண்டிய கட்டப்பொம்மனும் தளபதியும் திகைத்தனர்.

எட்டையபுரம் பட்டத்துக் குதிரையை அடக்க பாஞ்சாலங்குறிச்சியில் யாருமே இல்லையா?

வீரக்கேள்வியைக் கேட்டுக் கொண்டே வீரன் சுந்தரலிங்கத்தை பார்த்தார் கட்டப்பொம்மன்.
மன்னர் உன் வீரத்தை உலகறியும் படி செய்ய விரும்புகிறார் என்று அமைச்சர் தானாபதி பிள்ளை கூற, அடுத்த நிமிடமே குதிரையை அடக்க களத்தில் நின்றார்.மாவீரனைக் கண்டு கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். அந்தப் பேய்க் குதிரையை மடக்கிப்பிடித்து அதன் முதுகில் ஏறி அமர்ந்த அடக்கினார். குதிரைப் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போனது. மாவீரன் சுந்தரலிங்கம் வாழ்க! வாழ்க!!வாழ்க!!! என்று கோஷம் விண்ணைப் பிளக்க கட்டபொம்மன் மேடையை விட்டிறங்கி தனது தளபதியைக் கட்டித் தழுவினார்.
முதன் முறையாக சொந்த ஊர் செல்லும் வீரன் சுந்தரலிங்கத்திற்கு வீரப்பதக்கங்களை அணிவித்து ராஜமரியாதைச்செய்யும் விதமாக தனது குதிரைப் படையின் ஒரு பிரிவையும் அவருடன் அனுப்பி வைத்தார் கட்டபொம்மன்.

ஆங்கிலேயருக்கும் பாஞ்சாலங்குறிச்சி சமஸ்தானத்திற்கும் நேரடிப்போர் நடந்தது. முதல் நாள் போரில் திறமை முழுவதையும் காட்டிப் போரிட்டு வெள்ளைத் தேவன் வீரமரணமடைந்தார். அன்றையப்போரில் விழுப்புண்பட்டு வீழ்ந்த ஊமைத்துரை வீரத்தாய் ஒருவரால் காப்பாற்றப்பட்டு சிவகங்கைச் சீமைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கட்டப்பொம்மன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் இருப்பது ஆபத்து என்று நாகலாபுரத்திலிருந்து தப்பி புதுக்கோட்டை தொண்டமானிடம் தஞ்சம் புகுந்ததாகவும் ஆனால் தொண்டமான் கட்டப்பொம்மனை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்ததாகவும் வரலாறு கூறுகிறது.
வீரன் சுந்தரலிங்கம் உயிருக்கு பயந்து எங்கும் தப்பித்து ஓடவில்லை. வெற்றி அல்லது வீர மரணம் என்பது தான் வீரனின் குறிக்கோளாக இருந்தது. சுந்தரலிங்கத்தை வீழ்த்திவிட்டால் பாஞ்சாலங்குறிச்சி நம் கையில் என்று கும்மாளமிட்டனர்.

கோட்டைக் கதவுகளை திறந்து ஆங்கிலேயரையும் கூலிப்படையினரையும் வெட்டி வீழ்த்தினார் சுந்தரலிங்கம் ஆங்கிலேயர்கள் அவரை நெருங்கப் பயந்தார்கள்.
தனியொருவனாக இருந்தும் எதிரியிடம் சரணடையாமல் தொடர்ந்த போரிட்டார். மூன்று நாள் போரில் சாதித்துக் காட்டினார் வீரன் சுந்தரலிங்கம். நான்காம் நாள் போரில் சொந்த வீரர்களுடன் இருந்து வீரன் சுந்தரலிங்கத்திற்கு சோதனைகள் நெருங்கின. இனியும் சிறுபடையுடன் போராட முடியாது என உணர்ந்த அவர் ஆங்கிலேய ஆயுத பலத்தை அழிக்கத் திட்டமிட்டார்.

வெள்ளையர்களை வெறும் வாளுடன் சமாளிப்பது எப்படி என யோசித்த வீரன் சுந்தரலிங்கம் பீரங்கிக் குண்டுகளுக்குப் பயன்படுத்தும் வெடிமருந்தக்கிடங்கை அழித்துவிட்டால் ஆங்கிலேயரின் கொட்டத்தை அடக்கிவிடலாம் எனக் கணித்தார். அவரின் மாமன் மகள் (முறைப்பெண்) வடிவு நினைவுக்கு வர அவள் உதவியுடன் வெடிமருந்து கிடங்கை அழிக்கத் திட்டமிட்டு ஆட்டு மந்மையை ஆவாரங்காடு வழியாக ஓட்டி வந்து கிடங்கிற்கு முன் நிறுத்திவிடச் சொன்னார்.
வீரன் சுந்தரலிங்கம் நுழைவாயிலில் எரிந்து கொண்டிருந்த திப்பந்தத்தை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார். இதைப்பார்த்த வெள்ளையச் சிப்பாய்கள் மிரண்டார்கள். வடிவு வெள்ளை காரச் சிப்பாயைத் தாக்கிவிட்டு வீரன் சுந்தரலிங்கத்திடம் ஓடினாள். வெடிமருந்த கிடங்கின் உள்ளே வீரன் சுந்தரலிங்கமும் வடிவும் இருக்க வெளியில் கொந்தளிப்புடன் வெள்ளையர் இருப்பதைக் கண்டு மெய்சிலித்தார் வீரன். பாஞ்சாலங்குறிச்சியைக் காப்பாற்றுவது ஒன்றையே மனதில் கொண்ட வீரன் சுந்தரலிங்கம் வெடிமருந்து கிடங்கை ஒரு முறைப் பார்வையிட்டான். அடுத்த நொடியே வெடிமருந்து பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறின.
அக்னி ஜூவாலையின் வெம்மைத்தாங்காமல் நூற்றுக்கணக்கானச் சிப்பாய்கள் உடல் கருகி செத்தனர். பாங்சாலங்குறிச்சி கோட்டையை என் உயிர் இருக்கும் வரை அன்னியன் கையில் விடமாட்டேன். நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக என் உடல் பொருள் ஆவியை இழக்கத் தயாராக இருக்கிறேன் என்று முழக்கமிட்டபடி மாவீரன் தன் மாமன் மகள் வடிவுடன் வீரமரணம் அடைந்தான்.
ஆங்கிலேயப் படைகளால் வெல்ல முடியாத அந்த மாவீரனின் உயிர் விடுதலைக்கான வேள்வியில் வெடிமருந்து கிடங்கில் அடங்கியது. 05.09.1799 அன்று வீரமரணம் அடைந்தார். மாவீரன் சுந்தரலிங்கம் பிறந்த கவர்னகிரி கிராம மண்ணை இன்றும் மக்கள் வீரமண்ணாகப் பாவித்து பிறந்த குழந்தைகளுக்கு அந்த மண்ணை ஊட்டி வருகின்றனர்.அந்த வீரமண்ணைத் தொட்டிலுக்குக் கீழேயும் கொட்டி வைக்கின்றனர்.

மாவீரன் சுந்தரலிங்கத்தை போன்றே வீரத்துடனும், விவேகத்துடனும் வளர்வார்கள் என்பது இப்பகுதி மக்களிடையே காலம் காலமாய் இருந்து வரும் நம்பிக்கை.
உலக வரலாற்றிலேயே தற்கொலைப்படை பிரிவு என்று ஒரு தனிப்படையை தொடங்கி அதற்கு தன்னையும் தன் முறைப்பெண் வடிவையும் பலியாகத் தந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். இந்தியாவின் ஒரு தென்மூலையில் சுடராய் கொழுந்த விட்டு எரிந்த அடிமை தனத்திற்கு எதிராகப் போராடிய மாவீரன் சுந்தரலிங்கத்தின் பங்கை யாராலும் இனி மறைக்க முடியாது.

பாஞ்சாலங்குறிச்சி படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர், நெற்கட்டான்செவல் பாளையத்தின் படைத்தளபதி மாவீரன் வென்னிக் காலாடியார் மற்றும் கொங்கு நாட்டு புரட்சிப்படை தளபதி மாவீரன் இராமசாமி மள்ளர் ஆகியோர்களின் இந்திய சுதந்திர போராட்ட பங்களிப்பு

நெற்கட்டான்செவ்வல் பாளையத்தின் படைத்தளபதி மாவீரன் வென்னிக் காலாடி வரலாறு.

பூலித்தேவன் வெண்ணிக்கலாடிக்கு நட்ட வீரக்கல்

தேவேந்திரகுல வேளாளர் குலத்தில் உதித்த வீரத்திலகம். வெண்ணிக்காலாடி இரண்டாம் சுதந்திர போராட்ட வீரர், மாவீரன்.வென்னிக் காலாடியார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் பகுதியைச் சார்ந்தவர். இவர் மிகவும் துணிச்சலான வீரராகவும், புலித்தேவன் பாளையக்காரரின் திறமை வாய்ந்த போர்ப்படை தளபதியாக செயல்பட்டார். 1750-1808 காலங்களில் 500-ற்கு மேற்பட்ட ஆங்கில படைவீரர்கள் இவரது வாளிற்கு இரையாகினர். இதனால் இவர் அனைவராலும் பாராட்டப்பட்டு கவுரவிக்கபட்டார். இவரின் தொடர் வெற்றியால் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அடித்தளமிட்டது.அப்போது, வெள்ளையர்களுக்கு கைக்கூலியாக செயல்பட்டவர்களில் ஒருவன் மருதநாயகம் என்கிற கூலிப்படைத் தளபதி கான்சாகிப். இவன் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்டாத மன்னர்கள் மீது போர் தொடுத்து வந்தான். 1759 நவம்பர் 6-ஆம் நாள் நெற்கட்டான் செவ்வல் கோட்டையை கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர, ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது படைகளில் 400க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னைக்கு திரும்பினார் கான்சாகிப். இனி வீரத்தால் வீழ்த்த முடியாத பூலித்தேவனையும் வென்னிக் காலாடியையும் துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்த திட்டமிட்டான். இரவில் நெற்கட்டான் செவ்வல் கோட்டையை முற்றுகையிட தீர்மானித்தான். இதற்காக பெரும் காட்டில் கூடாரங்கள் அமைத்து முகாமிட்டிருந்தான். இதையறிந்த போர்ப்படை தளபதி வென்னிக் காலாடியார் தமது படைவீரர்களுடன் சென்று அம்முகாமை தாக்கினார். இதில் வெள்ளைக்கார ஒருவன் மறைந்திருந்து தாக்கியதில் வென்னிக் காலாடியாரின் வயிறு கிழிந்தது. குடல் வெளியே சரிந்தது. உடனே தன் தலைபாகை துண்டை எடுத்து வெளியே வந்த தன் குடலை வயிற்றுக்குள் திணித்து கட்டிக்கொண்டு மீண்டும் சண்டையிட்டார். இதில் மீண்டும் தோல்வியுடன் கான்சாகிப் வெள்ளையர் படைகளுடன் புறமுதுக்கிட்டு ஓடினான். வெற்றி வாகை சூடிய வென்னிக் காலாடி அதேவேகத்தில் கோட்டைக்குச் சென்று புலித்தேவனிடம் கூறினார். காலாடியை புலித்தேவன் கட்டியணைத்தார். அவரது மடியில் காலாடியின் உயிர் பிரிந்தது. இவ்வாறு புலித்தேவனின் உயிரை காப்பற்றி தன் உயிர் ஈன்ற காலாடியின் தன்னலமில்லா பங்களிப்பை நாம் அவ்வளவு எளிதாய் மறந்திட இயலாது. இது போன்ற தியாகம் தான், சுதந்திர போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தது. காலாடியின் வீரத்தியாகத்தை எந்நாளிலும் நாம் நினைவில் கொள்ளத்தக்கது. பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீரன் பூலித்தேவன், காலாடி வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறிக் குமுறி கண்ணீர் சிந்தினார். என்பதை பின்வரும் பூலித்தேவன் சிந்து பாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே
பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…
எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை
எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…
காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய் பறந்தானே…
பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ … (பூலித்தேவன் சிந்து)
இது நடந்தது 1760 டிசம்பர் 20 இல். பூலித்தேவன் வெண்ணிக்காலாடிக்கு வீரக்கல் நட்டார். அவர் போரிட்டு வீரசுவர்க்கம் பெற்ற இடம் காலாடி மேடு என அழைக்கப்படுகிறது.

பாஞ்சாலங்குறிச்சி படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர், நெற்கட்டான்செவல் பாளையத்தின் படைத்தளபதி மாவீரன் வென்னிக் காலாடியார் மற்றும் கொங்கு நாட்டு புரட்சிப்படை தளபதி மாவீரன் இராமசாமி மள்ளர் ஆகியோர்களின் இந்திய சுதந்திர போராட்ட பங்களிப்பு

மாவீரன் சுந்திரலிங்க தேவேந்திரருக்கு மணிமண்டபம் அமைத்தது போன்று வெண்ணிக்காலாடிக்கும் மணிமண்டபம்: அமைக்க வேண்டும் என்று தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக தமிழக முதல்வர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது கவணத்தில் கொள்ளத்தக்கது…

கொங்கு நாட்டு புரட்சிப்படை தளபதி இராமசாமி தாசர் மள்ளர் வரலாறு

 மாவீரன் கொங்கு நாட்டு புரட்சிப்படை தளபதி இராமசாமி தாசர் மள்ளர்

மூன்றாம் சுதந்திர போராட்ட வீரர், மாவீரன் கொங்கு நாட்டு புரட்சிப்படை தளபதி இராமசாமி தாசர் மள்ளர் கோவை வேடபட்டி வன்னியம்பளையத்தை சேர்ந்தவர். அடங்கி கிடந்த சுதந்திர தாகத்தை கிள்ளி விட்ட ஆயுத போராளியாக ஆங்கிலேயரை விரட்ட அதிரடி படையை திரட்டிய மாவீரன் இராமசாமி மள்ளர் 1804-யில் வரிகொடா இயக்கத்தை கோவை, சேலம் மாவட்டங்களில் ஏற்படுத்தினார். இவர் கொங்கு நாட்டு தளபதி தீரன் சின்னமலையின் உயிர் நண்பர் ஆவார். திப்பு சுல்த்தான் இறப்பிற்கு பின் அப்பகுதி புரட்சிகள் மந்த நிலைப்பட்டன. அப்பொழுதுதான் வெகுண்டெழுந்த தளபதி இராமசாமி மள்ளர், தளபதி தீரன் சின்னமலையுடன் இணைந்து கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டனர். இவ்விரு தளபதிகளின் வீர வலிமையை எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் தொடர்ந்து தோல்வியை தழுவினர். இவ்வாறு தளபதி இராமசாமி மள்ளர் ஆற்றிய பங்களிப்பால் நாட்டின் விடுதலைக்கு வழிவகுத்தது.


2 thoughts on “மாவீரர் சுந்தரலிங்கம், வென்னிக் காலாடியார், கொங்கு நாட்டு தளபதி இராமசாமி மள்ளர் வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *